×

தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறக்கிறார்

சென்னை: தூத்துக்குடி மாநகரின் தந்தை என போற்றப்படும் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் அமைக்கப்பட்ட உருவச் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் தூத்துக்குடியில் 1869 நவம்பர் 15ம் தேதி பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர்.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 1909 டிசம்பர் 21ல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மக்களின் பேராதரவுடன் 5 முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கியுள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்சினையால் சிரமப்பட்டு வந்துள்ளது. 1927ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

இந்தக் குடிநீர்ப் பிரச்னைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ், “தூத்துக்குடி மக்களின் தந்தை” என போற்றப்படுகிறார். இத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசை போற்றும் வகையில், அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலை அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 2021 நவம்பர் 13ம்தேதி அன்று அறிவிக்கப்பட்டு, 2022 அக்டோபர் 14ம்தேதி உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ.77.87 லட்சம் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய சிலையினை இன்று காலை 11.30 மணி அளவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாநகரின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீசுக்கு குவிமாடத்துடன் கூடிய உருவச் சிலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் திறக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Tuticorin ,Rao Bahadur Cruz Parnanthees ,Chief Minister ,M.K.Stalin ,Chennai ,Thoothukudi ,
× RELATED திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி அடித்துக் கொலை